ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி. நாளை 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்.

பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுவது மிகுந்த பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைக்கு தனிச் சிறப்பு உண்டு.

பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக் கிழமையன்று ராகுகாலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.

சிவாலயங்களில், பிரதோஷ பூஜை சிறப்புறக் கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

குறிப்பாக, நந்திதேவர்தான் பிரதோஷ பூஜையின் பிரதான நாயகன். எனவே நந்திதேவருக்குத்தான் அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்படும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

நாளை 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரதோஷம். மாலையில் குடும்பத்துடன் சிவாலயம் சென்று தரிசியுங்கள். முடிந்தால் வில்வமும் செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்வோம். கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்.

இந்தநாளில், பிரதோஷ தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் பெருகும்; நிலைக்கும்.

சிவத்துக்குள் நாம்
நமக்குள் சிவம்

முதலும் நீயே
முடிவும் நீயே
தாயும் நீயே
தந்தையும் நீயே
அகிலமும் நீயே
அண்டமும் நீயே
இங்கு எல்லாமும் நீயே
எம் பெருமானே ஈசனே
உம் திருவடி பற்றினேன்
நமக்குள் சிவம்

திருநாவுக்கரசர்ளிய திருப்பதிகம்


பாடல் எண் : 1

நம்பனை நகர மூன்று மெரியுண வெருவ நோக்கும்
அம்பனை யமுதை யாற்றை யணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் டிங்கட் செஞ்சடைக் கடவு டன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா வெழுகின் றேனே.

பொழிப்புரை :

நம்மால் விரும்பப்படுபவனாய் , மும்மதில்களும் தீக்கு இரையாகி வெறுவும் தன்னால் நோக்கும் நோக்காகிய அம்பினை உடையவனாய் , அமுதனாய் பேரின்ப பெருக்காறாய் , அழகிய சோலையை உடைய காஞ்சிமாநகரில் ஒற்றை மாமரத்தடியில் உறைபவனாய் , ஒளி வீசும் கிரணங்களை உடைய பிறையைச் சிவந்த சடையில் அணிந்த கடவுளாய்ச் செம்பொன்னும் பவளத்தூணும் போன்றுள்ள சிவபெருமானைத் தியானிப்பதனால் யான் உள்ளக் கிளர்ச்சி உடையேன் ஆகின்றேன்

பாடல் எண் : 2

ஒருமுழ முள்ள குட்ட மொன்பது துளையு டைத்தாய்
அரைமுழ மதன கல மதனில்வாழ் முதலை யைந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழு மாடக் கச்சியே கம்ப னீரே.

பொழிப்புரை :

கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே ! ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் தன்கண் வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் அடைவு கேடாகப் பலகாலும் பேசுகின்றேன்

பாடல் எண் : 3

மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினான் மதில்கண் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூல மேந்தி யேகம்ப மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.

பொழிப்புரை :

பார்வதி பாகரான இளையராய் , ஒற்றை மழுப் படையை ஏந்தியவராய் , வில்லினால் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு அவற்றை அழித்த செல்வராய் , இலைவடிவமான சூலத்தைக் கையில் ஏந்தி ஏகம்பத்தை விரும்பி உறையும் பெருமானைத் தம் தலையால் வணங்க வல்ல அடியவர்கள் பெரிய தலைவர்களுக்கும் தலைவராகும் உயர் நிலையினராவர்

பாடல் எண் : 4

பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவா ரேத்த நின்ற வேகம்ப மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.

பொழிப்புரை :

பொன்போன்று பூத்த கொன்றைமாலையை முறுக்குண்ட சடைக்கண் அணிந்த செல்வராய் , பரிசுத்தமான கங்கையைத் தம் அழகிய முடியிலே விளங்குமாறு வைத்து , தம்மை வழிபடும் அடியார்கள் ஏத்துதற்குப் பொருளாய் நின்ற ஏகம்பத்தை விரும்பி நிலையாக உறையும் பெருமானை வழிபடும் முறையை அறிய இயலாதேனாய் , இப்பொழுது அவனிடம் பற்றுக்கொண்ட யான் வீணாகக் கழிந்த காலத்தை நினைத்து மயங்கினேன் .

பாடல் எண் : 5

மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபால மேந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோ ரேன மோட்டி யேகம்ப மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.

பொழிப்புரை :

மை பூசிய குவளைமலர் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதிபாகராய் , கையில் மண்டை ஓட்டைப் பிச்சை பெறும் பாத்திரமாக ஏந்தி வீட்டு முகப்புத்தோறும் பிச்சை பெறுவாராய் , தம்மால் அம்பு எய்யப்படும் பன்றியை விரட்டி , ஏகம்பம் மேவிய பெருமானைக் கைகளால் தொழவல்ல அடியவர்களுக்குக் கொடிய தீவினைகளைப் போக்கிக்கொள்ளுதல் இயலும் .

திருச்சிற்றம்பலம் 

Post a Comment

Previous Post Next Post