மொட்டை போடுவதன் காரணம்


உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.

இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.

பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.

குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.

ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.

ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.

இதனை சிலர் கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?' என்றும் ,

'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.

முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?' என்று கிண்டலடிப்பார்கள்.

யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.

மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.

இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.

மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .

அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.

குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.

அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.

அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.

ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,

நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.

ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.

ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு. எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது.
வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின் எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு எதிரானதோ இல்லை.

யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் ஹிந்துக்களோ,மற்ற மதமோ, காரணமில்லை என்பதை உணருங்கள்.
தனிமனிதனின் தவறுக்காக,எந்த ஒரு மதத்தையும் இழிவாக்குவது,
இழிவாகப்பேசுவது என்பது எந்த மதமானாலும் தவறே!

அதுபோல் பெண்கள் சிறு பிராயத்தில் இருக்கும் போது மொட்டை போடலாம், பெரியவர்கள் ஆன பின்பு மொட்டை போடுவது தவறு , அது போல் அங்கபிரதஷணம், செய்வதும் தவறு ,பெண்கள் பஞ்ச அங்க நமஸ்காரம் மட்டுமே செய்கிறார்கள் , ஏனென்றால் பெண்களின் மார்பகங்கள் நமஸ்காரம் செய்யும் போது பூமியில் படக்கூடாது , பெண்களை நமது கலாச்சாரம் உயர்வாக கருதுகிறது,

 இப்படி இருக்கையில் அங்கபிரதட்சணம் செய்தால் பலமுறை மார்பக பகுதி பூமியில் படும், ஆதலால் தான் பெண்கள் அங்கபிரதட்சணம் செய்வதை தவிர்க்க வேண்டும், மேலும் கர்பப்பை நகர்ந்து பல பிரச்சனை உருவாகும், இதன் கரணமாகவே சூரை தேங்காய் உடைப்பது, பூசணிக்காய் உடைப்பது ,அங்கபிரதட்சணம் செய்வது, மொட்டை போடுவது இவற்றை எல்லாம் தவிர்ப்பது நன்மை பயிக்கும். நுனிமுடி கொடுக்கலாம் அதுவும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் சிறிதாக நுனிமுடியை கத்தரித்து ,மஞ்சள் துணியில் முடிந்து வைத்து அதை காணிக்கையாக விரும்பும் கோவிலில் செலுத்தலாம்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று எல்லோரும் போற்றுகிறோம், மேற்கூறிய விஷயங்களை பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும், கடைப்பிடிக்க வேண்டும். வீட்டின் நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும், நமது பாரம்பரிய கலாச்சாரத்தினை பேணி காக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post