திருஅண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி



சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் .

ஆனால் திருஅண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருப்பதற்கான கதை:

இக்கதை திருஅண்ணாமலை வாசிகள் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

முகலாயர்கள் காலத்தில் திருஅண்ணாமலையார் கோவிலுக்கு பேராபத்து வந்தது.

அதனை அண்ணாமலையாரே தன் பக்தனான வீரேகிய முனிவர் முனிவரின் வாயிலாக எதிர்கொண்டார். 

திருஅண்ணாமலையார் கோவில் பெரிய நந்தி கால்மாற்றி அமர்ந்த வரலாறு:

முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். 

அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்றனர்.

முகலாய அரசன் "நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்?"

அதற்கு அந்த ஐவர் இந்த காளை எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்" என்றனர். 

அதற்கு அரசன் " உம் சிவன் இந்த அண்ணாமலையார் உன்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் ,வந்து சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல்" என்று கூறி வெட்டிவிட்டான். 

உடனே பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் "நமசிவாய" எனஜபித்துக்கொண்டு
இருக்கிறான்.அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார்.

உடனே வடக்கே அந்த ஆத்ம பக்தனை தேடி சென்ற அந்த ஐவரும் "நமசிவாய" என்ற மந்திர சத்தத்தை கேட்டு அவ்விடம் சென்ற பார்த்த போது 15 வயது பாலகன் ஒருவனை கண்டனர்.

 ஐவரும் "இச்சிறு பாலகனா பக்தன் " என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று ஐவரையும் தாக்க முற்பட்டது . 

அச்சிறுபாலகன் நமசிவாய மந்திரம் கூறி புலியை வென்று அவர்களை காப்பாற்றினான்.

ஐவரும் நடந்ததை கூறி 
அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். 

அண்ணாமலையார் கோவிலுக்கு ஐவருடன் வந்தடைந்த அந்த பாலகன் அரசனை கண்டு 
தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான். 

உடனே அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று "நமசிவாய" மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச்செய்தான்.

அதை நம்ப மறுத்த முகலாய அரசன்"நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் " எனக் கூறி நம்ப மறுத்தான்.

"சரி உனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுக்கின்றேன்,இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன்,நான் வென்றால் இடித்து விடுவேன் " என கூறினான். 

அதற்கும் சளைக்காத அச்சிவபாலகன் அண்ணாமலையார் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான்.

அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் ,அவருக்கு சக்தி இருந்தால் அந்த மாமிசத்தை பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். 

அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர்.

அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. 

அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது.

 இதனை கண்ட ஐவரும் பாலகனும் "ஓம் நமசிவாய" "அண்ணாமலைக்கு அரோகரா" எனப் போற்றி பேரானந்தம் அடைந்தனர். 

இதனையும் நம்பாத அந்த அரசன் கடைசியாக ஒரு போட்டியை அறிவித்தான்.

அண்ணாமலையார் கோவில் பெரிய நந்தியை பார்த்து " இந்த உயிரில்லாத நந்தி சிலைக்கு உயிர் கொடுத்து, காலை மாற்றி மடித்து வைத்து உட்கார வைத்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் ,கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான். 

உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். 

கருணைக்கடலான நம் அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமருமாறு உத்தரவிட்டார். 

அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார். 

அரசனும் அண்ணாமலையானை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான்

அன்று அங்கு வந்த பாலகன் தான் இன்று வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். 

அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம் அண்ணாமலையார் கோவிலுக்கு வடக்கே இருப்பதாலேயே,பெரிய நந்தியின் முகம் வடக்கு பக்கம் லேசாக திரும்பி காணப்படுகிறது.  

வீரேகிய முனிவர் நினைவாக இங்கு அவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது. 

இக்கதைக்கான ஆதாரங்களை இக்கிராமத்திற்கு சென்றால் காணலாம். 

ஆனால் இக்கதையை அடியேன் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டேன். 

பர்வதமலை அருகே தற்சமயம் சீலப்பந்தல் என்று அழைக்கபடும் சீநந்தல் எனும் கிராமத்தில் இந்த வீரேகிய முனிவரது ஜீவ சமாதி அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா

Post a Comment

Previous Post Next Post